expr:dir='data:blog.languageDirection' xmlns='http://www.w3.org/1999/xhtml' xmlns:b='http://www.google.com/2005/gml/b' xmlns:data='http://www.google.com/2005/gml/data' xmlns:expr='http://www.google.com/2005/gml/expr'> சென்னை உயர்நீதிமன்றம் ~ தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)
My Great Web page
உங்கள் மொபைல் ஐ இலவசமாக recharge செய்து கொள்ள இந்த லிங்க் ஐ click செய்யவும்

Tuesday, 22 May 2012

சென்னை உயர்நீதிமன்றம்




சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தனது 150ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. ஆனால் இதன் விதையும், அதற்கான கதையும் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது. கிழக்கிந்திய கம்பெனியார் சென்னையில் கால்பதித்து 1640இல் ஜார்ஜ் கோட்டையை கட்டிய உடனே, நீதிமன்றமும் வந்துவிட்டது. சிறிய வழக்குகளை விசாரிப்பதற்காக 'சத்திரம் நீதிமன்றம்' எனத் தொடங்கப்பட்ட அதில், சிவில், கிரிமினல் என இருவகை வழக்குகளும் விசாரிக்கப்பட்டன.

பின்னர் மேயர் கோர்ட் (1688), கட்சேரி கோர்ட் (1793), ரிக்கார்டர் கோர்ட் (1798) என சென்னை பல நீதிமன்றங்களைக் கண்டது. இவற்றின் உச்சம்தான், 1801இல் உருவான மெட்ராஸ் உச்சநீதிமன்றம். இது சுமார் 60 ஆண்டுகள் செயல்பட்டது. பின்னர் 1861ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் ஆணையின்பேரில், மெட்ராஸ், கல்கத்தா மற்றும் பம்பாய் உயர்நீதிமன்றங்கள் உருவாகின.

1862, ஆகஸ்ட் 15ந் தேதி மெட்ராஸ் உயர்நீதிமன்றம் முறையாக தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சரியாக 85 ஆண்டுகளுக்கு முன்பே, ஆகஸ்ட் 15ல் நீதி வெல்லும் என்பதை சொல்லாமல் சொன்னதுபோல இது அமைந்திருந்தது.

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ஆரம்ப நாட்களில் ராஜாஜி சாலையில் இருக்கும் சிங்கார வேலர் மாளிகையில் அமைந்திருந்தது. பின்னர் 1888இல் உயர்நீதிமன்றத்திற்கென ஒரு அழகான கட்டடம் கட்டும் பணி தொடங்கியது. சுமார் 4 ஆண்டுகால உழைப்பில், ஜே.டபிள்யூ. பிரசிங்டன் (J.W. Brassington) தயாரித்த வடிவமைப்பில், ஹென்றி இர்வின், ஜே.எச். ஸ்டீபன்ஸ் போன்ற கலைஞர்களின் கைவண்ணத்தில், இந்தோ - சாராசனிக் பாணியில் இன்றைய உயர்நீதிமன்றக் கட்டடம் வானளாவ உருவானது. இதற்காக அந்த காலத்திலேயே ரூ.12 லட்சம் செலவானது.

இந்த கட்டடத்தின் அழகில் மயங்கி செஞ்சி ஏகாம்பர முதலியார் என்ற கவிஞர், 'ஐகோர்ட்டின் அலங்காரச்சிந்து' என்ற பெயரில் ஒரு புத்தகமே போட்டிருக்கிறார். அதில் இந்தோ - சாராசனிக் பாணி உயர்நீதிமன்ற கட்டடத்தை பற்றிய அவரின் விவரிப்பில் சில வரிகள்...

'அண்டா போல் ஒரு கூண்டு சண்டமாக கட்டி

அடுத்தசுத்திலும் பெருங் கொடத்தை போல வெகுகூட்டி

கண்டவர் பிரம்மிக்க கலசமதிலே மாட்டி

கண்கள் சிதரும்படி தங்ககிலுட்டுவூட்டி...'

இப்படி பார்ப்பவரை பரவசத்தில் ஆழ்த்திய சென்னை உயர்நீதிமன்ற கட்டடம், பய நிமிடங்களை சந்தித்த சம்பவங்களும் இருக்கின்றன. முதல் உலகப் போரின்போது, 1914, செப்டம்பர் 22ஆம் தேதி இரவு அது நிகழ்ந்தது. எம்டன் என்ற ஜெர்மானியக் கப்பல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மீது குண்டு வீசியது. இதில் நீதிமன்ற சுற்றுசுவரின் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்தது. இதன் நினைவாக நீதிமன்றத்தில் இன்றும் ஒரு கல்வெட்டு இருக்கிறது.

இரண்டாம் உலகப் போரையும் பார்த்தது இந்த கட்டடம். 1942இல் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, வழக்கத்திற்கு மாறாக முன்னதாகவே நீதிமன்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு, முக்கிய கோப்புகள் அனைத்தும் கோவைக்கும், அனந்தபூருக்கும் கொண்டு செல்லப்பட்டன. விடுமுறைக் கால நீதிமன்றம் கோவையிலேயே செயல்பட்டது. கொஞ்சம் பதற்றம் தணிந்த பிறகு சென்னை திரும்பினாலும், தி.நகரில் இருந்த ஆங்கிலோ இந்தியப் பள்ளி ஒன்றில்தான் உயர்நீதிமன்றம் சில காலம் செயல்பட்டது.

வெறும் கட்டடங்களால் மட்டுமின்றி இங்கு பணிபுரிந்த தலைசிறந்த நீதிபதிகளாலும், வழக்கறிஞர்களாலும் பல பெருமைகளைப் பெற்றிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் நீதிமன்ற வளாகத்தில் இன்று சிலையாக நின்றுகொண்டிருக்கும் நீதிபதி சர் டி. முத்துசாமி ஐயர். ஏழைக் குடும்பத்தில் பிறந்து தெருவிளக்கில் படித்த திருவாரூர் முத்துசாமி ஐயர், 1878இல் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியானார். இதன் மூலம் முதல் இந்திய நீதிபதியை அளித்த பெருமை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு கிடைத்தது.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி என்ற பெருமைக்குரியவர் டாக்டர் ராஜமன்னார். இவர் 1948இல் இருந்து 1961 வரை சுமார் 13 ஆண்டுகள் தலைமை நீதிபதியாக இருந்தார். இப்படிப் பல்வேறு மரியாதைக்குரிய நீதி அரசர்களின் கால் தடங்களுடன், 150 ஆண்டுகளைக் கடந்து நீதியின் பாதையில் தொடர்ந்து கம்பீரமாகப் பயணிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

நன்றி - தினத்தந்தி



* சென்னையின் முதல் கலங்கரை விளக்கம் இங்குதான் இருந்தது. நீதிமன்றம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு இரண்டாவது கலங்கரை விளக்கம் இதன் உச்சியில் அமைக்கப்பட்டது.

* வ.உ.சிதம்பரனாருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வாலிஸ் இரட்டை ஆயுள்தண்டனை வழங்கினார். பின்னாளில் அவரே தண்டனையைக் குறைக்க உதவியதுடன், வ.உ.சி.யின் வழக்கறிஞர் பட்டத்தையும் மீட்டெடுக்க உதவினார். இதனால் தனது கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி

* இது உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகமாகக் கருதப்படுகிறது.

* 2004இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தொடங்கப்பட்டது.

Posted by பார்த்திபன் (Parthiban)

0 comments:

Post a Comment

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி,.

தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.

Contact me

Cursors for Myspace @ Fillster.com

வந்தவர்கள்